இந்தியாவில் மக்கள் பலரும் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் இதனை விரும்புகின்றனர். ஆனால் ரயிலில் பயணம் செய்யும் சிலர் செய்யும் அட்டகாசங்கள் ரயில் பயணிகளை சிரமத்திற்கு ஆளாக்குகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் பயணி ஒருவர் படுக்க செய்த தில்லாலங்கடி வேலையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஒரு ரயிலில் இருக்கை கிடைக்காததால் பயணி ஒருவர் கோச்சின் மேல் பகுதியில் இருபுறமும் போர்வை ஒன்றைக் கட்டி அதில் படுக்க திட்டமிடுகின்றார். தொட்டில் போல போர்வையை கட்டும் நிலையில் இதனை பார்த்த மற்ற பயணிகளும் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். அந்த நபர் தன்னுடைய காலணிகளை மின்விசிறியின் மீது வைத்து தான் அமைத்த துணி ஊஞ்சலில் ஓய்வெடுக்க மேலே செல்கின்றார். ஆனால் அந்த துணி போர்வையால் அவரது எடையை தாங்க முடியவில்லை. அதன் முடிச்சு அவிழ்ந்து அந்த நபர் பெரிய சத்தத்துடன் கீழே விழுகின்றார். இதனால் அவருடைய இடுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.