நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டையை புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் தேவைப்படுபவர்களுக்கு பதிவு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட பதிவு மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் பரிந்துரை மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கார்டு பதிவு போன்ற செயல்பாடுகள் நடைபெற உள்ளது.

அதனால் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஒன்று முதல் 18 வயது வரை உள்ள அனைத்து மாற்று திறன் கொண்ட குழந்தைகளும் கலந்துகொண்டு பயன்பெற்றுக் கொள்ளுமாறு மோகனூர் வட்டார வளமையத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5, குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பதிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் நகல் போன்றவற்றை எடுத்து வந்து பதிவு செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.