திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ ஓட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு பெண் ஓட்டுநர்களாக இருக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு மேல் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ள பெண்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை போன்றவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின் இதனை பூர்த்தி செய்து திருவண்ணாமலை காந்திநகர் எட்டாவது தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி கூறியுள்ளார்.