திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் கலையரங்க திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் 155 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட புதிய தார் தளம் அமைப்பது மற்றும் குடிநீர் கழிவறை போன்ற வசதிகளை ஏற்படுத்துவது என பல்வேறு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் மண்ணை சோழராஜன் கலந்துகொண்டு இந்த பணியை தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் நகர சபை துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி பொறியாளர் குணசேகரன், நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.