ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்ட ரெட்டி என்பவர் பெங்களூரில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் மணிகண்ட ரெட்டி தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பரிசல் ஓட்டிகளின் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.