நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த 11-ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து மனோகரன் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் தன்னுடைய பழைய வீட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வந்ததோடு தன்னுடைய மகனை வெளிநாட்டிற்கு அனுப்பவும் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளார். இதனால் மனோகரனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்தகறாறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ராகுல் சந்தைப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராகுல் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடைய தாயார் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அதன் பிறகு மற்றொரு அறையில் மனோகரன் தூக்கில் பிணமாக தொங்கினார். குடும்பத் தகராறில் மனோகரன் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாமக்கல் காவல்துறையினருக்கு ராகுல் தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..