தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயக்குமார் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்ததோடு அவருடைய கழுத்தை நெரித்தார். இதில் சம்பவ இடத்திலேயே பொன்மாரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், 3 குழந்தைகளும் தவித்து வருகிறார்கள். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.