தமிழகத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சிஏஏ சட்டம் நேற்று நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில்,  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் அளிக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,  மத்திய பாஜக அரசு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை தடுப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும்,  இச்சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பாஜக அரசு இருந்து வரும் நிலையில் பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அவசரக்கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல,  பலவகை மொழி, இனம், மதம் மற்றும் வாழ்விடம் சூழல் ஆகியவற்றில்  வேறுபட்டு இருந்தாலும்,

ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய் திருநாட்டின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது என்றும், அது மட்டுமல்ல   சிறுபான்மை சமூகத்தினருக்கும் மற்றும் முகாம் வாழ் தமிழர்களுக்கும் இந்த சட்டம் எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் திமுக அரசு அமைந்த உடனேயே கடந்த 08 /09/ 2021 அன்று  தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து,

அதை  நிறைவேற்றி இந்த சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என்றும்,  மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதையும்  குறிப்பிட்டிருக்கும் அவர்,  இந்திய மக்களிடையே பேதங்களை தோற்றுவிக்க வழி செய்யும் இந்த சட்டத்தினால் எந்த வித நன்மையோ, பயனோ இருக்கப்போவதில்லை என்றும், இந்த சட்டம் முழுமையும் தேவையற்ற சட்டம் என்றும்,  மேலும் ரத்து செய்ய வேண்டியது என்றும் குறிப்பிட்டிருக்கும் அவர்,  மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இந்த குடியுரிமை தடுப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தாது என்றும் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்.