உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23 வரை நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் 500 ரூபாய், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்கலாம். அறநிலையத்துறையில் hrce.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில்  maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 13 வரை திருக்கல்யாண தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

அதிக அளவிலான நபர்கள் முன்பதிவுக்கு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்த பக்தர்களின் ஈமெயில் முகவரிக்கு ஏப்ரல் 14ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் அனுப்பப்படும். மேலும் தெற்கு கோபுரம் வழியாக கட்டணம் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.