வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று செல்வகுமார் என்பவரும், வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ராமதாஸ் என்பவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த 2 பொது நல வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஏற்கனவே 37  குடும்பங்கள் கண்டறியப்பட்டு டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குடும்பத்திற்கு 6000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், ரொக்கமாக கொடுக்கும் போது முறையற்றவர்களுக்கு சேர வாய்ப்புள்ளது. 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது போல வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். டோக்கன் முறையில் வழங்கப்படும்போது டோக்கனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்து வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது, ஏழை எளிய மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிவாரணம் வழங்குவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அதே சமயம் இந்த வெள்ள நிவாரணத்தை தாமதாக வழங்குவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்பதால் உண்மையான பயனாளர்களுக்கு நிவாரணம் சென்றடைவதை அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பட்டுள்ளனர். எனவே இந்த வெள்ள நிவாரண தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு எந்த வித இடைக்கால தடையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.