திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் சேக் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி அதில் நீங்கள் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள். உங்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அதனை பெற ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதனை நம்பி இர்பானியின் தாய் சில வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினார்.

அதன்பிறகு பல்வேறு காரணங்களை கூறி அந்த நபர் 9 லட்சத்து 9 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை வாங்கினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பரிசு தொகையை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் தனது மகனிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இர்பான் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.