திருச்சி மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநாதன் நகர் தீரன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, உறவினர்களான ஆண்டாள், பாண்டியன், அவரது மனைவி கோமதி ஆகியோருடன் திருச்சியில் இருந்து அரியலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் மதியம் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புள்ளம்பாடி அடுத்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது ரவிச்சந்திரன் என்பவர் டிராக்டரில் சவுக்கு மரம் ஏற்றி வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிராக்டர் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதனால் கார் சுக்குநூறாக நொறுங்கி ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தியும், ஜெயலட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.