கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு பச்சப்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் பேருந்தை அவர் நிறுத்தி வைத்துள்ளார். அங்கு வேறு 2 பேருந்துகளும் நின்றுள்ளது. அதன் பிறகு அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் படுத்து தூங்கியுள்ளனர். அதன்படி தான் ஓட்டி சென்ற பேருந்துக்கடியில் கருப்பசாமி பாய் விரித்து தூங்கியுள்ளார்.

அதன்பிறகு நேற்று காலை அனைவரும் எழுந்த நிலையில் கருப்பசாமியை அவர்கள் எழுப்பி விட்டுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்காமல் அசந்து தூங்கியுள்ளார். இந்நிலையில் கருப்பசாமி ஓட்ட வேண்டிய பேருந்தை ஓட்டக்கூடிய மாற்று  டிரைவர் நேற்று காலை அங்கு வந்தார். அவருடைய பெயர் சூர்யா. அவர் கருப்பசாமி பேருந்துக்கு கீழ் தூங்குவதை கவனிக்காமல் பேருந்தை எடுத்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் கருப்பசாமிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.