நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர் இருக்கையில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ராஜ்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால் அவரை அந்த பெண் எச்சரித்துள்ளார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருக்கும்போது ராஜ்குமார் மீண்டும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிடவே சக பயணிகள் ராஜ்குமாரை பிடித்து வைத்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த பிறகு அவரை அங்கிருந்த காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். அவர்களிடம் அந்த பெண் நடந்ததை கூறினார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் ஈரோடு ரயில்வே காவல்துறையினர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.