தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக   அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவை வழங்கி வருகிறது. இரண்டு கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பால் ஊட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுடைய ஊட்டச்சத்து நிலையை கண்டறிவதற்கு தமிழக அரசு திட்டம்ட்டது. அதன்படி 2022 ஆம் வருடம் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அடுத்து 2022 மே 7ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை முதலில் மு க ஸ்டாலின் அறிவித்து மே 21 ஆம் தேதி நீலகிரியில் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அங்கன்வாடி மூலமாக வழங்கப்பட்டு வரும் சத்து மாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையோடு கூடுதல் சுவை, மற்றும் புரதச்சத்து விகிதத்தை அதிகரிக்கும் விதமாக வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களை கொண்ட மாவு பாக்கெட்டுகள் பிரித்து வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் (மார்ச் 1 )இன்று முதல் அங்கன்வாடி மையங்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது.