சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். இந்நிலையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு எதிரே ராஜரத்தினம் நகர் அரசு தொடக்கப்பள்ளி அருகே கோபி தள்ளாடியபடி நடந்து சென்றார். அப்போது ஏற்கனவே குடிபோதையில் அமர்ந்திருந்த சிவா அவரது நண்பர் ஜான்சன் ஆகியோரிடம் பீடி கேட்டு கோபி தகராறு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சிவாவும், ஜான்சனும் கோபியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி அருகே கிடந்த ஆட்டு கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே கோபி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கோபியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.