முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரனை தாக்கியதாக இபிஎஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ அவதூறாக பேசிய விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார். இது பற்றி பேசிய அவர், அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட போது யாரும் புகார் அளிக்காமலேயே காவல்துறை உடனடியாக செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டது. தற்போது இபிஎஸ் விவகாரத்தில் காவல்துறை அவ்வாறு விரைந்து செயல்படவில்லை என்று சாடியுள்ளார்.