ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய இனிப்பு வகைகளையும் ஆவின் விற்பனை செய்கிறது. ஆவின் நிறுவனம் இப்போது பிளாஸ்டிக் பாக்கெட்டில் பாலை அடைத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ஆவின் பாலை பாட்டில்களில் விற்பது தொடர்பாக ஆராயப்படும் என தமிழக அரசானது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடையை எதிர்த்து பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது பால் விற்பனை மட்டும் ஏன் பிளாஸ்டிக்கில் நடக்கிறது? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதனை தொடர்ந்து பாட்டில் விற்பனை குறித்து ஆராய்வதாக அரசு தெரிவித்துள்ளது.