சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கே.பி.முனுசாமி கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கொளத்தூர் தொகுதிக்கு வாய்ப்பு தருவதாகவும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வாங்கி தருவதாகவும் கூறி என்னிடம் பணம் வாங்கிக் கொண்டார். 2021 தேர்தலுக்குப் பின் கொறடா பதவி பற்றி பிரச்சினையின் போது அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து கதறியுள்ளார் முனுசாமி. ஆனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது தர்மத்தின் தலைவன் என்று புகழ்ந்தவன் தான் கே.பி முனுசாமி. எங்களுடன் இருந்து கொண்டு ஓ.பி.எஸ்க்கு  தகவல் கூறி எட்டப்பன் வேலை பார்த்தவர் கே பி முனுசாமி. ஆனால் சூழ்நிலை காரணமாக முனுசாமியிடம் நிறைய முறை பணம் கொடுத்து வாங்கியுள்ளேன்.

அதிமுகவில் பணம் கொடுத்தால்தான் பதவி கிடைக்கும் எனும் நிலை தற்போது உருவாகியுள்ளது. பணம் வாங்கிக்கொண்டு பல பேருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் கே.பி.முனுசாமி. முன்னதாக மாவட்ட செயலாளர் பதவி வாங்கி தருவதாக கூறி கே.பி.முனுசாமி என்னிடம் ஒரு கோடி பணம் கேட்டதற்கான ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். இதற்கு கே.பி முனுசாமி பதில் அளித்துவிட்டால் தங்கமணி, வேலு குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் எனவும் கே.பி முனுசாமி என்னுடைய காரில் 4 பணப்பைகளை எடுத்துச் சென்று பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு வழங்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.