பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை கருணாநிதி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே சென்றபோது வரதராஜனுக்கு நெஞ்சுவலியும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனால் கருணாநிதி பேருந்தை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு ஓட்டி சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வரதராஜன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.