கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என கூறியுள்ளார். அவருக்காக விடுதியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அந்த பெண் தனது பெயர் லோகேஸ்வரி என கூறியுள்ளார்.

இதனையடுத்து வெளியே சென்ற பெண் சிறிது நேரத்தில் மூன்று பேருடன் விடுதிக்கு வந்துள்ளார். அதன் பிறகு மேலும் சில பேர் அந்த பெண்ணின் அறைக்கு சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர் விஷ்ணு அறைக்கு சென்று பார்த்தபோது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்ததை அறிந்தார். உடனே அறைக்குள் சென்று இரண்டு பேர் மட்டுமே தங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அறையை காலி செய்யுங்கள் எனக் கூறினார்.

அப்போது அங்கிருந்தவர்கள் மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. அந்த அறையில் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்தது. இதுகுறித்து விடுதி உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனே அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

ஒரு பெண்ணை தவிர மற்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் அந்த விசாரணையில் அவர்கள் கோவில்பாளையத்தை சேர்ந்த லோகேஷ், இம்மானுவேல், சமாத், நவீன் சக்தி, ஆகாஷ், 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அவர்கள் பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் வசதியானவர்கள் வசிக்கும் வீடுகளில் ஆயுதங்களை காட்டி மிரட்டி திருடுவதற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் 17 வயது சிறுமிக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதனால் போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர் மேலும் தப்பிய இளம் பெண்ணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.