சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாமிநாதனின் தந்தை குருசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவுகள் திறக்கப்பட்டு பூட்டுகள்  உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 38 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்தனர். இது குறித்து அம்பிகா அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.