புதுச்சேரி சுல்தான்பேட்டையில் வசிக்கும் முகமது அலி என்பவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பழனிவேல், பிரபாகரன் ஆகிய எட்டு பேரும் செயல்பட்டனர்.

இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இரு மடங்காக அந்த பணம் உயர்த்தி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதனை நம்பி நாகையை சேர்ந்த பொதுமக்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் என 8 கோடிக்கும் மேல் அந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் 8 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 270 ரூபாய் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

சில மாதங்கள் கழித்து பொதுமக்கள் நிதி நிறுவன இயக்குனர்களை சந்தித்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது நிதி நிறுவன இயக்குனர்கள் முகமது அலி வெளிநாட்டில் இருப்பதாக கூறி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் முகமது அலி, கோவிந்தராஜ் ஆறுமுகம் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.