கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடபுதூர், ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி  (42) . இவரது அண்ணன் மகாலிங்கம் (47). இவர்களின் 2 பேரின் வீடும் வடபுதூரில் அருகருகே உள்ளது. இருவருக்கும் திருமணமாகி இருவரின் மனைவி மற்றும் குழந்தைகள் இவர்களை விட்டு பிரிந்து சென்றதால், தனியாக வசித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்,  மகாலிங்கத்தின் தங்க நகையை அடகு வைத்து சகோதரர்கள்  இருவரும் இணைந்து தேங்காய் வியாபாரம் செய்தனர். இந்நிலையில்,  தீடீரென அந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுச்சாமி லாபத்தில் மட்டும்தான் பங்கு வேண்டும், நஷ்டத்தில் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே மீண்டும்  வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஆறுச்சாமி கிரிக்கெட் மட்டையால் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். உடனே  மகாலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ஆறுச்சாமியை குத்த முயன்ற போது, அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  பின் அவரை, துரத்திச்சென்று வடபுதூர் பஸ் நிலையம் அருகே வைத்து கத்தியால் குத்துவிட்டு மகாலிங்கம் தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதனால் உயிருக்கு போராடிய ஆறுச்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு ஆறுச்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் கிணத்துக்கடவு போலீஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான  மகாலிங்கத்தை கைது செய்தனர். மேலும் ஆறுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வியாபார நஷ்டத்தில் தம்பியை, அண்ணனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.