நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 24.58% அதிகம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இதில் திருப்பி செலுத்தும் தொகை போக மீதமுள்ள நிகர வரி வசூல் ரூ.12.31 லட்சம் கோடியாக இருக்கிறது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்ட நிகர வரியை விட 19.55 % அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பு நிதியாண்டின் நேரடி வரிகள் மதிப்பீடு 14.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இதில் 86.68 %த்தை  தற்போதைய நிகர வரி வசூல் எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் மொத்த அடிப்படையிலான கார்ப்பரேட் வரி இந்த நிதியாண்டில் 19.72 % வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தனிநபர் வருமான வரியும் 30.46 % வளர்ச்சி அடைந்துள்ளதாக நேரடி வரிகள் வாரியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.