மும்பையின் வாஷி பகுதியில் உள்ள கே.பி.பி கல்லூரியில், மாணவி ஒருவரின் உடை குறித்து பாதுகாவலர் தவறாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த உடை குறித்து விமர்சித்த பாதுகாவலர், “இப்படி ஆடை அணிவதற்கு பதில் ஆடை இல்லாமலே வரலாம்” என்று தரக்குறைவாகக் கூறியதாகத் தெரிகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் டாக்டர் சுபதா நாயக் அந்தப் பாதுகாவலரை அழைத்து மிகக் கடுமையாகக் கண்டித்தார்.

மாணவர்களின் உடை குறித்து கருத்து சொல்ல பாதுகாவலருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அது முதல்வரின் பொறுப்பு என்றும் அவர் அந்த வீடியோவில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட கல்லூரி நிர்வாகம், பணியாளர்களின் இத்தகைய அநாகரீகமான நடத்தையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

ரஜத் சிக்ஷன் சன்ஸ்தாவால் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரி, ஒழுக்கத்திற்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது என்பதால், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

“>

 

மாணவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது கட்டாயமானது என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் கல்லூரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.