நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆ.ராசா, பொன்முடி பெரியசாமி, கே. என் நேரு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. சம்பத், பெ. சண்முகம், க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர். சிபிஎம் நிர்வாகி சம்பத் கூறியதாவது, கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதலாக தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளது. இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

எங்களது கருத்துக்களை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். குறித்த நேரத்தில் நல்ல உடன்பாடு ஏற்படும். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும். விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்தார்..