இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது.

அப்போது, இந்தியக் கடற்படை கடல் வழியாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த சில நிமிடங்களே இருந்த நிலையில், பாகிஸ்தான் பயந்துபோய் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் இந்தியாவின் அதிரடித் தாக்குதலால் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் குறித்தும் அவர் பேசினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஒரு நாளைக்கு 130 கப்பல்கள் சென்ற பாதையில், தற்போது 6 முதல் 7 கப்பல்கள் மட்டுமே செல்வதாகவும், இதனால் உலகளாவிய கடல்சார் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போது சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.