இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினை திரும்ப ஒப்படைக்கவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (24.07.2023) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (25 .07. 2023) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில் நீண்ட காலமாக நிலவி வரும் இப்பிரச்சனையை தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கி விடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும், இந்த கடிதத்தை எழுதுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு இலங்கை அதிபர் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த போது முக்கியத்துவம் வாய்ந்த இப்ப பிரச்சனை குறித்து மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்சனையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கும் இலங்கை அதிபருடன் ஆன சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது IND-TN11-MM-837, IND-TN11-MM-257 பதிவு எண்கள் கொண்ட 2 விசை படகுகளும் இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டு உள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இந்த சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கும் கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திட இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இது தொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.