தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்கள் படகில் இருந்த நிலையில் 7 பேரை கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர்.

மேலும் 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை கடலில் தள்ளி வலைகள் ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மூன்று மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.