ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர்கள் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் குழந்தை மூளை சாவடைந்தது. இந்நிலையில் அந்த குழந்தை இடமிருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு இருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதாவது  குழந்தையின் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத பெண் குழந்தைக்கும், சிறுநீரகங்கள் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.