இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொடர்பை கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும். இதனைப் போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது 608 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாதங்கள் கழித்து இன்று 100 பேருக்கு மேல் எண்ணிக்கை பதிவாகும் என அஞ்சப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.