நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு லண்டனில் உள்ள நைட்கிளப்  ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அப்போது, நைட்கிளப்பிற்கு வெளியே ரக்பி விளையாட்டு வீரர்கள் சிலருடன் பென் ஸ்டோக்ஸ் குழுவினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகக் குத்திக் தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் தரையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் அடங்கிய 62 நொடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸின் கேப்டன் பதவிக்கே தற்போது பெரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB), போட்டி முடிந்த பிறகு வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பென் ஸ்டோக்ஸ் மீறியுள்ளாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த நிலையில் விதிகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச விதிகளை மீறியதாகக் கூறி அவருடைய பதவி பறிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. இல்லையெனில் அவரே பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.