சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு செல்வதற்காக ரேவதி தனது மகள் தீபிகாவுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் மதனபுரம் அருகே எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாமல் இருந்ததால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை கடக்க முயன்ற போது வேகத்தை கட்டுப்படுத்த தீபிகா சடன் பிரேக் பிடித்தார். இதனால் நிலைதடுமாறி ரேவதி சாலையில் விழுந்ததால் பின்னால் வந்த தனியார் பள்ளி வேனின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த ரேவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.