கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டார். அந்த நபர் ஏ.டி.எம் எந்திரத்தில் கார்டை போட்டு ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு கார்டு வேலை செய்யவில்லை என தெரிவித்தார். பின்னர் வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஜெயலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி நூதன முறையில் வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.