தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 6 பேர், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு பரவியுள்ளது.

 

அதே போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று பரவலை தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது பாதுகாப்பு அளிக்கும். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டெங்குகாய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள தேனி, குமரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் இறந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்பு இல்லை என விளக்கமளித்தார்.