புதுடெல்லியில் இருந்து ஜான்சி நோக்கிச் சென்ற தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் இரும்பு கம்பியை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடந்த இந்தத் தாக்குதலில், ரயிலின் ஜன்னல் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து உள்ளே இருந்த பயணி ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ரயிலுக்குள் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதும், ஜன்னலைத் துளைத்துக் கொண்டு வந்த இரும்பு கம்பியைப் பார்த்து பயணிகள் மிரண்டு போயிருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தும், இந்திய ரயில்வே இதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்கள் மீது கல் மற்றும் இரும்பு பொருட்களை வீசித் தாக்கும் சம்பவங்கள் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் மட்டும் இது போன்ற 1,698 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ரயில்வே தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

“>

 

ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்த இரும்பு கம்பி ஒரு உயிரையே பறிக்கும் அளவிற்கு ஆபத்தானதாக இருந்ததால், இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.