சினிமா உலகில் நுழைந்த புதிதில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இணைந்து நடிக்கும் ஒருவர், தானும் முன்னணி நடிகராக மாறிய பின், அதே நடிகருடன் இணைந்து பணியாற்றுவது என்பது சாத்தியமில்லாத காரியமாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்தியாவின் அனைத்து மொழி சினிமாக்களிலும், இரண்டு பெரிய கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் வழக்கம், சாத்தியமான ஒன்றாக மாறி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் சிரஞ்சீவி  தற்போது, ‘வால்தேர் வீரய்யா’ என்ற படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரவிதேஜா இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார். இதற்கு முன்  கடந்த 2000-ம் ஆண்டு சிரஞ்சீவியுடன் இணைந்து ‘அண்ணய்யா’ என்ற படத்தில், அவருக்கு தம்பியாக ரவிதேஜா நடித்திருந்தார். அதன்பிறகு தனி கதாநாயகனாக உருவெடுத்து அசுர வளர்ச்சியடைந்து, தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின், சிரஞ்சீவியும், ரவிதேஜாவும் இணைந்து  நடிக்கும் படம் தான் ‘வால்தேர் வீரய்யா’. இந்தப் படத்தில் வால்தேர் வீரய்யா என்ற  கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், உதவி போலீஸ் கமிஷனராக விக்ரம் சாகர் ஐ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் ரவிதேஜாவும் நடித்துள்ளனர்.

இதையடுத்து கதாநாயகிகளாக ஸ்ருதிஹாசன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் பாபிசிம்ஹாவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு ‘பவர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவீந்திரா.

இவர்தான் ‘வால்தேர் வீரய்யா’ என்ற படத்திற்கு கதை எழுதி இயக்கவும் செய்துள்ளார்.  இப்படம் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகர சங்கராந்தியை முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளது. சிரஞ்சீவியும், ரவிதேஜாவும் இணைந்த ‘வால்தேர் வீரய்யா’ படம்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.