சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற கருப்பு கோகுல் (22) கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்துள்ளார்.
இவர் தனது நண்பர்களுடன் போதை ஊசிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. நேற்று கோகுல் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை ஊசியை பயன்படுத்தியுள்ளார். உடனே மயக்கமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.