சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில் ஏறி அமர்ந்த ஸ்ரீபிரியா, வழக்கம்போல OTP  எண்ணை, கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் OTP  எண்ணை பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், காரின் டிக்கியில் இருந்த டீசல் கேனை எடுத்து வந்து, அவர் மீது ஊற்றி எரிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் பதறிப் போன ஸ்ரீபிரியா மீண்டும் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த முதியவர் ஒருவர், அங்கு ஓடி வந்து கார் ஓட்டுநரை தடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.