கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் வரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய விதமாக 442 பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதில் சென்னையில் 242 பேருந்துகளும் மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதுரை, சென்னை மற்றும் கோவை  மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய விதமாக முழுமையாக போக்குவரத்துகள் இயங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார். சென்னையில் 37.4 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய விதமாக தயார் செய்யப்பட உள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பொது மக்களுக்கான பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கானது எனக் கூறுவது தவறானது எனவும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது இன்றளவும் சவாலாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் 100% பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றியமைக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பதால் 100% தாழ்தள பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என கூறியுள்ளார். இதனையடுத்து என்னென்ன தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது? என்பது குறித்து போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.