சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் அழும் சத்தம் கேட்டது. அந்த பெண் என்னை விட்டு விடுங்கள் என கூறி கெஞ்சியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த வீட்டில் அழுது கொண்டிருக்கும் இளம் பெண்ணை விபச்சார தொழிலில் வற்புறுத்தி ஈடுபடுத்துகிறார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த விபச்சார தடுப்பு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு இளம் பெண்ணை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பெண் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு சென்றுள்ளார். ஆனால் விபச்சார கும்பலிடம் சிக்கியதால் இளம்பெண்ணின் வாழ்வு சீரழிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தரகரான காளிதாசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.