சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நித்தின்(6), ருத்ரேஷ்(3 1/2) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் நடுவீரப்பட்டு பகுதியில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த ஜவான் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். அவர்கள் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கன்னடபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தர்காஸ் சாலை பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ருத்ரேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தில் பெற்றோரும் நித்தினும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.