ஹைதராபாத்தின் நாச்சாரம் பகுதியில் முன்னாள் மென்பொருள் பொறியாளர் (Software Engineer) ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் சட்டவிரோதமாகக் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி துறையில் ஏற்பட்ட ஆட்குறைப்பு (Layoff) காரணமாக வேலையை இழந்த அந்த இளைஞர், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன், அதனை வியாபாரமாக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்காகத் தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே 17 கஞ்சா செடிகளை மிகவும் ரகசியமாக வளர்த்து வந்துள்ளார்.

​ரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை நடத்திய கலால்துறை அதிகாரிகள், செழித்து வளர்ந்திருந்த அந்தச் செடிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செடிகள் முழுமையாக வளர்ந்திருந்தால் சுமார் 10 கிலோ வரை கஞ்சா கிடைத்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலையில்லாத விரக்தியில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இப்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.