புதுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அருண்குமாரும் ஜனனி என்ற பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட காதல் ஜோடியின் பெற்றோரை விசாரித்த போலீசார் அந்த ஜோடிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இருவீட்டாரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதி வாங்கினர்.