ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காமராஜர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பவானியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் அந்தியூர் பிரிவு அருகே நடந்து சென்றார்.

அப்போது வருணபுரம் மீனாட்சி கல்யாண மண்டபம் வீதியில் வசிக்கும் சந்திரன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.