கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், சகலெஸ்புராவில் உள்ள புகழ்பெற்ற பெட்டடா பைரவேஸ்வரா கோயில் வளாகத்தில் அரங்கேறியுள்ள ஒரு வன்முறைச் சம்பவம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியின் இயற்கை எழிலைக் கேமராவில் சிறைபிடிக்கவும், ‘ப்ரீ வெடிங் ஷூட்’ (Pre-wedding shoot) நடத்தவும் வந்த புகைப்படக் கலைஞர்களை, ஒரு கும்பல் வழிமறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
“யாரைக் கேட்டு இங்கே போட்டோ எடுக்கிறீர்கள்? அனுமதி வாங்கினீர்களா?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த உள்ளூர் இளைஞர்கள், திடீரெனக் கைகலப்பில் இறங்கி புகைப்படக் கலைஞர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
#Breaking: In Karnataka’s Sakleshpur, photographers were attacked during a pre wedding shoot at Bettada Bhairaveshwara Temple. Equipment worth ₹5 lakh was damaged; police registered a case and launched a search.#Karnataka #Sakleshpur #Crime #PublicSafety #IndiaNews #JaagIndia pic.twitter.com/5YQTxtYW5y
— Jaag India (@thejaagindia) March 28, 2026
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் “நாங்கள் சுற்றுலாப் பயணிகள் தானே, ஏன் அடிக்கிறீர்கள்?” என்று எவ்வளவோ கெஞ்சியும், ஆத்திரமடைந்த கும்பல் அவர்களை விடாமல் தாக்கியதோடு, விலையுயர்ந்த கேமரா உபகரணங்களையும் சேதப்படுத்த முயன்றுள்ளது. இந்தச் சம்பவம் கோயிலுக்கு வந்திருந்த மற்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாகச் சகலெஸ்புரா ஊரகக் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில், பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
