சீனாவின் வுஜின் நகரில் உள்ள புல்வெளிப் பகுதி ஒன்றில், ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரைமட்டமாகி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பிறகும் அந்த ஹெலிகாப்டரின் இறக்கைகள் அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்ததால், ஹெலிகாப்டர் தரையில் பயங்கரமாகச் சுழன்றது. இதில் அதன் ஓட்டுநர் அறையான காக்பிட்டில் (Cockpit) சிக்கியிருந்த பைலட் மற்றும் பயணி ஆகிய இருவரும், பொம்மைகளைப் போல உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவரது தலை தரையிலும், ஹெலிகாப்டரின் விளிம்பிலும் மீண்டும் மீண்டும் பலமாக மோதும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றிலும் கூடியிருந்த பொதுமக்கள், ஹெலிகாப்டர் இறக்கைகள் அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்ததால் ஆபத்து கருதி உடனடியாக உள்ளே சென்று அவர்களை மீட்க முடியாமல் திகைத்து நின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புப் படையினர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை; ஒருவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சீனாவில் கடந்த ஆண்டு ஹெல்மெட் மற்றும் பாராசூட் அணியாமல் நேரலையில் விமானம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த 55 வயது பிரபல இன்ஃப்ளூயன்ஸர் டாங் பேஜியின் மரணத்தையும் இந்தச் சம்பவம் மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.