தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு நீதிபதி சரமாரியான கேள்விகளை எழுப்பியதோடு கடும் கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார்.
அதன் பிறகு வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி எஸ்பிக்கள் விமலா, சியாமளாதேவி, உள்ளிட்டோர் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர். எஸ்பிக்கள் உடன் ஏ டி எஸ் பி களும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கரூரில் விஜயின் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தில் அனைத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் குறிப்பாக விஜய் சென்ற வாகனத்தில் உள்ளே மற்றும் வெளியே இருந்த சிசிடிவி பதிவுகளையும் சேகரிக்க வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
