குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது

அந்த மாட்டின் முகத்தை பிளாஸ்டிக் டப்பா முழுமையாக மூடியிருந்ததால், அதனால் எதையும் பார்க்க முடியாமல் பெரும் தவிப்புடன் சாலையில் ஓடியுள்ளது. கண் தெரியாமல் பயந்துபோன அந்த மாடு, சாலையில் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தலாம் அல்லது தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவானது.

ஆபத்தான இந்தச் சூழ்நிலையை உணர்ந்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், மாடு மிரண்டு தாக்க முற்பட்ட போதிலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கினர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அந்த மாட்டை மெதுவாக அணுகி, அதனைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை பத்திரமாக அவிழ்த்து எடுத்தனர்.

எவ்வித காயமும் இன்றி அந்த வாயில்லா ஜீவன் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆபத்தான போக்குவரத்து நெரிசலிலும் யோசிக்காமல் களமிறங்கி மாட்டின் உயிரைக் காப்பாற்றிய பொதுமக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி, “இவர்கள் நிஜமான ஹீரோக்கள்”, “உண்மையான இந்திய மனிதநேயம்” என நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துகளையும் லைக்ஸ்களையும் இணையத்தில் வாரி இறைத்து வருகின்றனர்.